குற்றவாளிகள் அரசியலில் நுழைவதைத் தடுக்க அரசு முயற்சி: கபில் சிபல்
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் அமைப்பினருடன் கலந்துரையாடிய கபில்சிபல் கூறியதாவது:
அரசியலில் கிரிமினல்கள் நுழைவதை தடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் கட்சி தீவிரம் காட்டிவருகிறது.
கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் அரசியலில் நுழைவதைத் தடுத்தாக வேண்டியது அவசியம். நீதித்துறை நியமனங்கள், ஆணைய மசோதா, தற்போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதா லோக்சபாவிற்கு வரும் போது நீதித்துறை நியமனங்கள் ஆணையத்தின் தலைவரான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அரசியல் சட்ட ரீதியான அந்தஸ்து அளிக்கப்படும்.
கிரிமினல் வழக்குகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களின் பதவியை உடனே பறிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதிலிருந்து எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த சட்டப்பாதுகாப்பை சிலர் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.