எம்.பிக்கள் மீதான வழக்குகளில் சலுகை காண்பிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: எம்.பிக்கள் மீதான வழக்குகளை மட்டும் சிறப்பு சலுகை கொடுத்து விசாரிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி உள்ள எம்.பிக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்தால்தான் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதிகள் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங் உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் காலதாமதம் குறித்து லோதா அதிருப்தி தெரிவித்தார்.
தலைமை நீதிபதி லோதா கூறுகையில், கிரிமினல் நீதி நடைமுறையை துரிதப்படுத்த மத்திய அரசுதான் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, எம்.பிக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க கூறுவது சரியான வாதமாக இருக்க முடியாது. எம்.பிக்களுக்கு மட்டுமே விரைந்து நீதி அளித்தால் அது சரியான நடைமுறையாகாது.
நீதிமன்றங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே தீர்ப்புகளை விரைவுபடுத்த முடியும். கிரிமினல் வழக்கில் 10 ஆண்டுகாலம் விசாரணை என்பது நல்ல ஜனநாயகத்துக்கு வழிவகுக்காது என்றார்.