35 ஆண்டுகளுக்குப் பின் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கும் பணி தொடக்கம்!
தேக்கடி: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தும் பணிகள் நேற்று தொடங்கின.
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே 7-ந் தேதி தேதி உத்தரவிட்டது. மேலும், அணையைப் பராமரிக்கவும், கண்காணிக்கவும், மத்திய நீர்வளத் துறையின் கீழ் கண்காணிப்புக் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி. நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக அரசின் சார்பாக பொதுப் பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சாய்குமாரும், கேரளத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளரும், கேரள நீர்ப்பாசனத் துறையின் முதன்மைச் செயலாளருமான வி.ஜே.குரியனும் நியமிக்கப்பட்டனர்.
இக்குழு நேற்று தேக்கடியிலிருந்து கண்ணகி படகில் முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர். அதேபோல, கேரள அரசின் பிரதிநிதி வி.ஜே.குரியன் தலைமையில், கேரள அதிகாரிகள் கேரள சுற்றுலாத் துறை படகில் தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர்.
பின்னர் அணையில் மூவர் குழுவினர் இணைந்து பிரதான அணை, பேபி அணை, மண் அணை, கேலரி பகுதியில் உள்ள 10 அடி, 45 அடி கேலரிக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இறுதியாக அணையிலிருந்து உபரி நீராக கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றக் கூடிய 13 ஷட்டர்களையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையே 13 ஷட்டர்களையும் பாதி இறக்கி தயார் நிலையில் வைத்திருந்த தமிழக பொதுப் பணித் துறையினர், உடனடியாக மூவர் குழுவினர் முன்னிலையில் 13 ஷட்டர்களையும் கீழே இறக்கி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதன்மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அணையில் தண்ணீரைத் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்பட்டது.