தமிழகத்துக்கு தண்ணீர்.. கேரளாவுக்கு பாதுகாப்பு:.. பேசித் தீர்க்கலாம்: உம்மன்சாண்டி
திருவனந்தபுரம்: தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. முல்லை பெரியாறு, சிறுவாணி பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்படும் போது செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர் கூறியதாவது:
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் எங்கள் மக்களின் பாதுகாப்பும் முக்கியம்.
எங்கள் மக்களின் பாதுகாப்பு நலன் கருதிதான் முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கூட்டினால் அணையில் சிறு கசிவோ, உடைப்போ ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது, இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை.
பிரச்சனையை அலசி ஆராய்ந்து தான் அணுக முடியும். தமிழக விவசாயத்திற்கு தண்ணீர் தேவை என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் கேரள மக்களையும் நினைத்து பார்க்க வேண்டும்.
சிறுவாணி அணை விவகாரத்தில் பழுதடைந்த குழாய்களை சரி செய்ய வந்த தமிழக அரசு அதிகாரிகளை கேரள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பது சரியானதல்ல. இது நட்புடன் கூடிய அண்டை மாநிலங்களின் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் எல்லாம் பேசி தீர்க்க முடியாதது அல்ல.
கேரள-தமிழக இரு மாநில அரசுகளும் இந்த பிரச்சனைகளை சமூகமாக பேசி தீர்த்து கொள்ளலாம் என்று உம்மன் சாண்டி கூறினார்.