கடை திறப்பு விழா என்று கூறி பூசாரியிடம் ரூ. 1 லட்சம் நகை பறிப்பு – தம்பதி கைவரிசை
மும்பை: மும்பையில் ஓடும் காரில் கோவில் பூசாரியை தாக்கி ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்த தம்பதியினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மும்பை முலுண்ட் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் அதே பகுதியில் உள்ள பால்ராஜேஸ்வர் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
கடந்த 19 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பூசாரி பரத்தை சந்தித்து, காந்திவ்லியில் புதிய கடை திறப்பு விழா நடத்த இருப்பதால் பூஜை செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
கடை திறப்பு விழா:
இதனையடுத்து பரத் சம்பவத்தன்று கடை திறப்பு விழாவுக்கு தன்னை அழைத்து செல்ல காஞ்சுர்மார்க் ரயில் நிலையம் அருகே வருமாறு அந்த பெண்ணிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
காரில் பயணம்:
இந்தநிலையில் காலை 11 மணி அளவில் பரத்தை ஏற்றிச்செல்ல அந்த பெண் காரில் வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவரும் உடன் வந்திருந்தார்.
பூசாரியை தாக்கிய தம்பதிகள்:
அவர்களது காரில் பூசாரி பரத் ஏறிக்கொண்டார். பவாய் லிங்க் ரோடு அருகே கார் சென்றுகொண்டு இருந்தபோது ஓடும் காரில் தம்பதியினர் இருவரும் பரத்தை சரமாரியாக தாக்கினர்.
1 லட்சம் நகைகள் கொள்ளை:
பின்னர் அவர் அணிந்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்துவிட்டு பரத்தை நடுவழியில் இறக்கிவிட்டு, விட்டு தப்பி சென்றனர்.
போலீசில் புகார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரத் இது குறித்து முலுண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை பறித்துச்சென்ற தம்பதியினரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.