மும்பை ரயில் நிலையத்தில் தூங்கிய 5, 7 வயது சகோதரிகள் பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
மும்பை: ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 5 மற்றும் 7 வயது சகோதரிகள் இருவரை தொடர்ந்து மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்த இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை பாந்துப் ரயில்வே நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிக்கு இடம் கையகப்படுத்தபட்டதால் வீட்டை இழந்த குடும்பம் ஒன்று தங்கள் சொந்த ஊரான ரத்தினகிரிக்கு செல்லும் பொருட்டு ரயில்வே நிலையத்தில் தங்கி இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
அக்குடும்பத்தில் ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு சிறுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவையடுத்து அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பாக குர்லா ரயில்வே போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவரையும் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 19 மற்றும் 21 வயது உடைய 2 வாலிபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
மேலும், பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளை அதிகாலை 4 மணியளவில் தூக்கிச் சென்று கடந்த மூன்று நாட்களாக வாலிபர்கள் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குற்றவாளிகளை வளைத்துப் பிடித்த போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 363, மற்றும் 34 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.