கார்பா பந்தலுக்குள் நுழைய முஸ்லிம்கள் கோமியத்தை குடிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.
போபால்: முஸ்லிம்கள் கார்பா ஆட்டம் நடக்கும் இடத்திற்குள் நுழைய கோமியத்தை குடிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ்வர் சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹுசுர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ்வர் சர்மா. அவர் நவராத்திரியையொட்டி நடத்தப்படும் கார்பா நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் முஸ்லிம்கள் நுழைய வேண்டுமானால் அவர்கள் கோமியத்தை குடிக்க வேண்டும் அல்லது பசும் பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பஞ்ச்கவ்யாவை உண்ண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்து பெண்களுடன் தான் வர வேண்டும். அவ்வாறு வந்தால் தான் அவர்கள் இந்து பெண்களை பார்க்க மாட்டார்கள் என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.
கார்பா நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடலுடன் துவங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வர விரும்பும் முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று சர்மா மேலும் தெரிவித்துள்ளார். சர்மாவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முன்னதாக மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. உஷா தாகூர் கூறுகையில்,
இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஆடவும், பாடவும் மட்டும் கார்பா பந்தலுக்கு வருவதை அனுமதிக்க முடியாது. பந்தலுக்குள் இந்து வாலிபர்களை மட்டும் அதுவும் அவர்களின் அடையாள அட்டையை பார்த்த பிறகு அனுமதிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.