இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்கள்' என்று கூறவில்லை: நஜ்மா ஹெப்துல்லா பல்டி
டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் ஹிந்துக்கள்' என்று கூறியதாக சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
"அனைத்து இந்தியர்களையும் ஹிந்துக்கள் என்று அழைப்பதில் தவறு இல்லை' என்று அவர் கூறியதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.அவர், "அரசியலமைப்புச் சட்டத்தை நஜ்மா ஹெப்துல்லா படித்தால் நல்லது. அதில், இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதன்படி, இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் பாரத மக்கள் என்று அர்த்தமாகும்; ஹிந்துக்கள் என்று அல்ல' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், "நஜ்மா ஹெப்துல்லா அவ்வாறு கூறியிருந்தால், அது துரதிருஷ்டவசமானது' என்று தெரிவித்தார்.
நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அதற்கு வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளார். "எந்த ஒரு நாட்டின் பெயரும் மூன்று மொழிகளில் மூன்று விதமாக அழைக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியர்களை அரபு மொழியில் "ஹிந்தி' என்று அழைக்கின்றனர்; பாரசீக மொழியில் "ஹிந்துஸ்தானி' என்றும், ஆங்கிலத்தில் "இண்டியன்' என்றும் அழைக்கின்றனர் என்றே நான் குறிப்பிட்டிருந்தேன்.
நான் கூறியது மதம் சார்பான அடையாளம் அல்ல. தேசியத்தின் அடையாளமாகவே அவ்வாறு கூறினேன். அனைவரையும் ஹிந்துக்கள் என்று நான் குறிப்பிடவில்லை' என்று நஜ்மா ஹெப்துல்லா வெள்ளிக்கிழமை கூறினார்.
அதேசமயம், "அனைத்து இந்தியர்களும் ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட வேண்டும்' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளது குறித்து கருத்துக் கூற நஜ்மா மறுத்துவிட்டார்.
இதனிடையே, நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். "இந்தியாவின் கலாசார ஒற்றுமையைத்தான் நஜ்மா குறிப்பிட்டார். மதச்சார்புடன் இந்த விவகாரத்தை பார்க்கக் கூடாது' என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சரும், பாஜக முக்கிய தலைவருமான நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "ஹிந்துத்துவம் என்பது வாழ்க்கை முறை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஏறக்குறைய அந்த கருத்தைப் போன்றே, நஜ்மாவும் குறிப்பிட்டுள்ளார்' என்றார்.