சாரதா சிட் பண்ட் மோசடி: நளினி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை
மேற்கு வங்க மாநிலத்தை கலக்கிய சாரதா சிட் பண்ட் மோசடியில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப இதில் தொடர்புடையவர்களை விசாரிக்க சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மற்றும் சாரதா நிறுவன அதிபர் சுதிப்தா சென் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் பல்வேறு மாநில அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சி.பி.ஐ.க்கு சாரதா நிறுவன அதிபர் சுதிப்தா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள 18 பக்க விளக்கத்தில், ஒவ்வொரு முறை கொல்கத்தா வந்த போதும், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு கட்டணம் வழங்கியதாகவும், அவர் தங்குவதற்கான ஐந்து நட்சத்திர ஓட்டல் செலவையும் தானே ஏற்றதாகவும் கூறியிருந்தார்.
மேலும், தன்னுடைய நிதி நிலைமை பற்றி தெரிந்து கொள்ளாமல் மனோரஞ்சனாஸ் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு நளினி தனக்கு அழுத்தம் கொடுத்தாகவும் சுதிப்தா அதில் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இன்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அப்போது சுதிப்தாவின் புகார் குறித்து நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.