100 நாள் மோடி அரசு: சென்னை, கொல்கத்தாவில் மார்க் குறைவு- பெங்களூர், புனேயில் சூப்பர் பாஸ்!!
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு சென்னை, கொல்கத்தாவில் குறைவான மதிப்பெண்களே கிடைத்துள்ளன. அதே நேரத்தில் பெங்களூர், புனே நகரங்களில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது மோடி அரசு.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. மோடி ஆட்சியின் 100 நாட்கள் குறித்து டைம்ஸ் ஆப் இண்டியா மக்களின் கருத்தை கேட்டறிந்தது. இந்த கருத்து கணிப்பு நாட்டின் 8 பெரிய நகரங்களில் நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் இக்கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றுகிறது என்று பொதுவாக 45%, அரசை மதிப்பிடுவதற்கான காலம் இன்னும் இருக்கிறது என 31% பேரும் கூறியுள்ளனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது மோடி அரசு
நகரங்களைப் பொறுத்தவரையில் மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது என 82% கூறியுள்ளனர். அதே நேரத்தில் சென்னையிலோ வெறும் 2% பேர் மட்டுமே அப்படியான ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கொல்கத்தாவிலோ ஒரு சதவீதத்துக்கும் குறைவானோரே மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக கூறியுள்ளனர்.
கடந்த காலங்களில் இருந்து மாறுபடுகிறது
மோடி அரசு கடந்த ஆட்சிகளில் இருந்து முழுமையாக மாறுபடுகிறது என டெல்லியில் 18%, மும்பையில் 48%, கொல்கத்தாவில் 43%, சென்னையில் 21%, பெங்களூரில் 40%, ஹைதராபாத்தில் 74%, புனேவில் 40% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சராசரியாக 45% பேர் மோடி அரசு மாறியுள்ளது என்று கூறியுள்ளனர்.
திறமையாக செயல்பட வேண்டும்
மோடி அரசு இன்னும் திறமையாக செயல்பட வேண்டும் என டெல்லியில் 47%, மும்பையில் 37%, கொல்கத்தாவில் 34%, சென்னையில் 55%, பெங்களூரில் 57%, ஹைதராபாத்தில் 22%, அகமதாபாத்தில் 23%, புனேயில் 59% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். சராசரியாக மொத்தம் 42% பேர் மோடி அரசு இன்னும் திறமையாக செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எதுவும் தெரியாது..
அதே நேரத்தில் மோடி அரசு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என டெல்லியில் 35%, மும்பையில் 14%, கொல்கத்தாவில் 24%, சென்னையில் 24%, பெங்களூரில் 3%, ஹைதராபாத்தில் 4%, அகமதாபாத்தில் 4%, புனேயில் 1% கூறியுள்ளனர்.
மோடி அமைச்சரவை பற்றி..
மோடி அமைச்சரவை எப்படியானது என்ற கேள்விக்கு 45% பேர் நன்றாக இருகிறது; 44% பேர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களையும் சேர்த்திருக்கலாம்; 11% படுமோசம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா-பாக் உறவு பற்றி
மோடி ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானை இந்தியா கையாளும் விதம் குறித்து 13% அற்புதமாக கையாளுகிறது என்றும் 38% பேர் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளனர். 50% பேர் பரவாயில்லை, படுமோசம் என கலந்து பதிலளித்துள்ளனர்.
மன்மோகன்சிங் அரசைவிட
முந்தைய மன்மோகன்சிங் அரசை ஒப்பிடுகையில் சிறப்பான ஆட்சி என்று 58% பேரும் 8% படு மோசம் என்றும் கூறியுள்ளனர்.
காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி மறுப்பு
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து மறுக்கப்பட்டதை சரி என 63% பேர் கூறியுள்ளனர். இவ்வாறு டைம்ஸ் ஆப் இண்டியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.