அகமதாபாத் வரும் சீன அதிபருக்கு பிறந்த நாள் விருந்தளித்து உபசரிக்கிறார் நரேந்திர மோடி
டெல்லி: தனது பிறந்த நாள் தினத்தன்று குஜராத் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நரேந்திரமோடி பிறந்தநாள் விருந்தளிக்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் 17ம்தேதி, நாளை மறுநாள் இந்தியா வருகிறார். இந்தியாவில் ஜி ஜின்பிங் முதலில் வந்திறங்கும் இடம் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமைந்துள்ள பெருநகரமான அகமதாபாத். அன்றைய தினம்தான் பிரதமர் நரேந்திரமோடியின் 64வது பிறந்த நாள் என்பது சிறப்பு. எனவே ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து மோடி பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, அகமதாபாத்-மும்பை நடுவேயான புல்லட் ரயில் திட்டம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தொழில் பூங்கா அமைத்தல் போன்ற திட்டங்களுக்கான அறிவிப்பை ஜி ஜின்பிங் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியாவை உற்பத்தி துறையில் முன்னணிக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவிலுள்ள மோடிக்கு சீன அதிபரின் அறிவிப்புகள் பிறந்தநாள் கிஃப்ட்டாக இருக்க போகிறது.
அன்றைய தினம் காந்தியடிகள் ஆசிரமத்துக்கும் செல்லும் ஜி ஜின்பிங் அதன்பிறகு அகமதாபாத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு டெல்லி புறப்படுகிறார். அதற்கு முன்பாக மோடி சார்பில் ஜி ஜின்பிங்கிற்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இது தனிப்பட்ட முறையிலான விருந்து என்பதால் மிகவும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாம்.
மோடி மற்றும் ஜி ஜின்பிங் தரப்பில் இருந்து தலா ஐந்து பேர் மட்டுமே இந்த விருந்தில் பங்கேற் முடியும்.