திருமணத்தை மறைத்த மோடி மீதான புகார்.. போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் கோர்ட் உத்தரவு!!
அகமதாபாத்: வேட்புமனுவில் தமது திருமணத்தை மறைத்த நரேந்திர மோடி மீது ஆம் ஆத்மி நிர்வாகி கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து 3 வாரத்துக்குள் பதிலளிக்க போலீசாருக்கு குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நரேந்திர மோடி தமது மனைவி பெயர் ஜஷோடபென் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கு முந்தைய சட்டசபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களில் திருமணமானவரா என்ற கேள்விக்கு எந்த ஒரு பதிலுமே மோடி அளிக்கவில்லை.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி நிஷாந்த் வர்மா என்பவர் குஜராத்தின் ரனீப் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்தார். அந்தப் புகாரில், 2012 குஜராத் சட்டசபை தேர்தலில் போது மோடி தமது வேட்புமனுவில் திருமணம் தொடர்பான உண்மையை மறைத்து தவறான தகவல் கொடுத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அத்துடன் மோடி போட்டியிட்ட மணிநகர் தொகுதியின் தேர்தல் அதிகாரி பி.கே ஜடேஜா மீதும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியிருந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து அகமதாபாத் நீதிமன்றத்தில் நிஷாந்த் வர்மா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிஷாந்த் வர்மா கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை 3 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.