இந்தியாவில் மோடி அலை முடிந்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: மோடி அலை முடிந்து விட்டதையே நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடந்த 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் ராஜஸ்தானில் 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், 9 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.
இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘மோடியின் அலை முடிந்து விட்டது. இன்றைய இடைத்தேர்தல் முடிவு மூலம் உண்மையை மக்கள் தெளிவாக உணர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
நூறு நாட்களில்
கடந்த 100 நாட்களில் ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து மக்களின் நம்பிக்கையை சிதறடித்து விட்டன என்பதை இன்றைய தேர்தல் முடிவு தெளிவாகத் காட்டுகிறது. பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்" என்றார்.
சத்ருகன் சின்கா
இதனிடையே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை புறக்கணித்ததே இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட காரணம் என்று அக்கட்சியின் எம்.பி சத்ருக்கன் சின்கா கருத்து தெரிவித்துள்ளார்.
முன்பு கிடைத்த வெற்றி
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பாஜக மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிறிது சரிவை சந்தித்திருப்பது உண்மைதான். நரேந்திர மோடியின் தலைமையில் கீழ் முன்னர் கிடைத்த வெற்றி தற்போது கிடைக்கவில்லை.
தவறுகளை புரிந்து கொள்வோம்
நாம் தற்போதைய தவறுகளை புரிந்து கொண்டு வரும் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது கவலை அளிக்கிறது என்றார்.