97 பேர் படுகொலை வழக்கு: குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 'நிபந்தனையற்ற' ஜாமீன்!
அகமதாபாத்: குஜராத்தில் 97 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் "நிபந்தனையற்ற" ஜாமீன் வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட மறுநாள்- 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதியன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 பேர் கோரமாக கொல்லப்பட்டனர்.
பின்னர் 2007ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமைச்சரவையில் மாயா கோட்னானிக்கு சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
28 ஆண்டு சிறைத் தண்டனை
இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கு விதிக்க பரிந்துரை?
இந்த நிலையில் கடந்த ஆண்டு கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி முதல்வராக இருந்த நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இடைக்கால ஜாமீன்
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாயா கோட்னானிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி கோட்னானி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
மீண்டும் ஜாமீன் கோரி மனு
இதைத் தொடர்ந்து அண்மையில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மாயா கோட்னானி ஜாமீன் கோரி மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாம் காசநோய், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மருத்துவ சான்றிதழ்களையும் அவர் தாக்கல் செய்தார்.
நிபந்தனையற்ற ஜாமீன்
இதை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், மாயா கோட்னானியை ரூ 1 லட்சம் பிணைத் தொகையிலான ஜாமீனில் நேற்று விடுதலை செய்தது. அதே நேரத்தில் நாள்தோறும் காவல்நிலையத்தில் கையெழுத்திட தேவையில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேல்முறையீடு
குஜராத் உயர்நீதிமன்றம் கோட்னானிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. குஜராத் கலவரங்களை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.