சோனியா பிரதமராவதை ராகுல் தடுத்தார்... நட்வர்சிங் பேச்சால் சர்ச்சை - காங். கண்டனம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் ஆவதை அவரது மகன் ராகுல்காந்தி தடுத்தார் என வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை உண்டாகியுள்ளது. இக்கருத்துக்கு காங்கிரஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் 83 வயது நட்வர் சிங். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். ஒரு வாழ்க்கை போதாது' என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதி, அதனை விரைவில் வெளியிடவுள்ளார் நட்வர் சிங்,
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சோனியா காந்தி ஏன் பிரதமராக பதவி ஏற்க முன்வரவில்லை என்பது தொடர்பாக பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சோனியாவின் பிரதமர் கனவு...
2004 ஆம் ஆண்டு பிரதமராக பதவியை ஏற்க சோனியா காந்தி தயாராக இருந்தபோது அதனை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்தார்.
ராகுலின் பயம்...
ஏனேன்றால், தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியைப் போல் நாட்டின் பிரதமராகி விட்டால் தனது தாயார் சோனியாவையும் யாராவது கொன்று விடுவார்கள் என்று அவரது மகன் ராகுல் காந்தி பயந்தார்.
அனுமதிக்க இயலாது...
எனவே, ஒரு மகன் என்ற முறையில் சோனியா காந்தி பிரதமராக அனுமதிக்க முடியாது என்று கூறி, ராகுல் காந்தி தான் தடுத்து விட்டார்.
மன்மோகன் சிங் முன்னிலையில்....
2004-ம் ஆண்டு சோனியா காந்தியின் வீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தனது கருத்தினை வெளிப்படுத்தினார் எனத் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்...
மேலும், இந்த உண்மையினை தனது சுய சரிதையில் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்காவுடன் கடந்த மே மாதம் தனது வீட்டுக்கு வந்திருந்ததாகவும் நட்வர் சிங் கூறியுள்ளார்.
கண்டனம்...
நட்வர் சிங்கின் இந்தக் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ள காங்கிரஸ், அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.