இந்திய தலைவர்களைப் போல் இல்லை 'இத்தாலி' சோனியா: நட்வர்சிங் பாய்ச்சல்
டெல்லி: தனது சுயசரிதை என்ற பெயரில் சோனியா காந்தி குடும்பத்துக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங். இதில் சோனியா ஒரு இத்தாலி நாட்டவர் என்ற விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார் நட்வர்சிங்.
2005ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த போது ஈராக்குக்கு உணவுக்கு எண்ணெய் ஊழல் திட்டத்தில் சிக்கி ராஜினாமா செய்தவர் நட்வர்சிங். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் சில மாதங்கள்தான் தாக்கு பிடித்தார்.
விமர்சனங்கள்...
இந்த நிலையில் தற்போது தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார் நட்வர்சிங். இதில் சோனியா காந்தி குடும்பம் மீதான விமர்சனங்களே அதிகமாக இருக்கிறது.
ராஜிவ்.. ராகுல்..
2004ஆம் ஆண்டு சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி தடுத்தார்; 1987-ல் ராஜிவ் காந்தி கேபினட் ஒப்புதலின்றி அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார்.. இலங்கை பிரச்சனையை தவறாக கையாண்டார் ..அதனாலேயே கொல்லப்பட்டார் என்றெல்லாம் நட்வர்சிங் விமர்சித்து வருகிறார்.
சோனியாவின் இத்தாலி பூர்வீகம்..
இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியும் அளித்து வருகிறார். நேற்று ஒளிபரப்பான நட்வர்சிங் பேட்டியில் சோனியாவின் இத்தாலிய பூர்வீகத்தையும் கையிலெடுத்தார் நட்வர்சிங்.
இந்தியர் இல்லையே..
இது குறித்து அவர் கூறுகையில், "ஒரு குடும்பத்துக்கு 45 ஆண்டுகாலம் விசுவாசமாக இருப்பவரை எந்த ஒரு இந்தியருமே சோனியாவை போல் நடத்தமாட்டார்கள்.. இந்தியாவில் அப்படி எதுவும் நடைபெறாது.. ஆனால் சோனியா இரக்கமற்ற முறையில்தான் நடந்து கொண்டார்... அவர் இந்தியர் இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.. ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ் காந்தி யாருமே இப்படி இருக்கமாட்டார்கள்" என்றார்.