மகாராஷ்டிரா: பாஜகவுக்கு எதிராக "பிராமணர்" ஆதிக்க எதிர்ப்பை ஆயுதமாக ஏந்தும் தேசியவாத காங்கிரஸ்!
மும்பை: மகராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த 'பிராமணர்' ஆதிக்க எதிர்ப்பு அரசியலை ஆயுதமாக எடுக்க தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைப் போலவே மகாராஷ்டிராவிலும் பிராமணர் எதிர்ப்பு அரசியல் இன்னமும் பட்டுப் போய்விடவில்லை. பூலே, சாகு மகாஜி, அம்பேத்கர் உள்ளிட்டோர் பிராமணர் ஆதிக்கத்துக்கும் ஜாதி ஆதிக்கத்துக்கும் எதிராக புரட்சிக் குரல் எழுப்பி இயக்கங்களைக் கட்டமைத்தனர்.
பிராமணர் - பனியா ஆதிக்க எதிர்ப்பு
இதன் நீட்சி அம்மாநில அரசியலிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் பிராமணர் - பனியா ஆதிக்க எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க தேசியவாத காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் முகமாக கருதப்படுகிற மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சகன் பூஜ்பால், பாஜகவில் அமைச்சர்களாகவும் பொறுப்புமிக்க பதவிகளிலும் இருப்பவர்கள் பிராமணர்களும் பனியாக்களும்தான் என்று ஒரு பட்டியலை வாசித்தார்.
இடஒதுக்கீட்டுக்கு பாஜக எதிர்ப்பு
அதேபோல் மராத்தா மற்றும் முஸ்லிம்களுக்கான மாநில அரசின் இடஒதுக்கீட்டை பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை சுட்டிக்காட்டும் தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், இது பாஜகவின் உயர் ஜாதி ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்று காட்டமாக விமர்சித்திருந்தார். அத்துடன் பாரதிய ஜனதாவின் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் விரோதப் போக்கை அம்லப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.
முண்டே மறைவின் பின்..
பாரதிய ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் முகமாக இருந்து வந்த கோபிநாத் முண்டேயின் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியில் அந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது. அத்துடன் பிராமணர், பனியாக்கள் ஆதிக்கம்தான் பாஜகவில் கோலோச்சுகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மராத்தா ஓட்டு
அத்துடன் மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் சம்பாஜி பெயரிலான 'சம்பாஜி படையணி' என்ற இயக்கம் மராத்தா சமூகத்தில் வலிமையானது. அந்த இயக்கத்தின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான தோழமை கொண்டுள்ளனர். இதனாலேயே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மராத்தா சமூகத்தில் இருந்து மட்டும் 72 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் ப்ளான்
இந்த தேர்தலிலும் பிராமணர் - பனியா ஆதிக்க எதிர்ப்பை பேசுவதன் மூலம் இந்த மராத்தா மற்றும் இதர சமூக வாக்குகளை தக்க வைக்க முடியும் என்பது தேசியவாத காங்கிரஸின் கணக்கு. இதை காங்கிரஸும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
வளர்ச்சிதான் எடுபடும்
ஆனால் பாரதிய ஜனதா தரப்போ, இனியும் பிரமாணர்- பனியா எதிர்ப்பு அரசியல் எடுபடாது; இப்போது 'வளர்ச்சி' என்ற முழக்கத்துக்கே மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவே மகாராஷ்டிரா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறது.
எந்த அரசியல் வெல்லும் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்!