சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெ.தேசம் கட்சிக்கு 15; ஒய்.எஸ்.ஆர்-9: கருத்து கணிப்பு
ஹைதராபாத்: சீமாந்திராவில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது லோக்சபா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சிக்கு கை கொடுக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக என்.டி.டி.வி. கருத்து கணிப்புகளை நேற்று வெளியிட்டது. தேசிய அளவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தாலும் மேற்குவங்கம், தமிழகம், ஒடிஷாவில் அதன் கூட்டணியில் இல்லாத திரிணாமுல், அதிமுக, பிஜூ ஜனதா தளம் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதாவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேர்ந்ததாலேயே தெலுங்குதேசம் கட்சிக்கு சற்று ஏற்றம் கிடைத்திருக்கிறதாம்.
ஆந்திராவில் ஓங்கும் நாயுடு கை
25 தொகுதிகளைக் கொண்ட பிரிக்கப்பட்ட ஆந்திராவில் தெலுங்குதேசம் 15; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-9; காங்கிரஸ்- 1 இடங்களைக் கைப்பற்றுமாம்.
தெலுங்கானா
17 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட புதியதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்- 8; காங்கிரஸ்- 5; பாஜக அணி 3 இடங்களில் வெல்லும்.
கேரளாவில் இடதுகள் கை
20 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் இடதுசாரிகள் முன்னணி 12 இடங்களிலும் காங்கிரஸ் முன்னணி 8 இடங்களிலும் வெல்லும். இம்மாநிலத்தில் கடந்த தேர்தலிலை விட இடதுசாரிகள் 8 இடங்களைக் கூடுதலாகவும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் இழந்தும் போகிறது.
கர்நாடகாவில் செம போட்டி
28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் பாஜக 12, மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் வெல்லும்.
மகாராஷ்டிரா
48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அணி 37, காங்கிரஸ் அணி 9 இடங்களில் வெல்லும். மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 1 தொகுதியில் வெல்லும்.