மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
காக்கிநாடா: கண் பார்வையற்ற மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆந்திரா அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திரா மாநிலம், காக்கி நாடாவில் உள்ள கண் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 3 பேரை, அந்தப் பள்ளி நிர்வாகிகள் சீனிவாஸ் மற்றும் கே.ராவ் ஆகியோர் கண்மூடித்தனமாக ஈவு, இரக்கமின்றி பிரம்பால் அடித்த வீடியோ காட்சி திங்கட்கிழமையன்று (21ஆம் தேதி) பல்வேறு ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, அந்த நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆந்திர மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது