ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா மீது வழக்குப் பதிய உள்துறையிடம் அனுமதி கோரும் என்ஐஏ!
டெல்லி: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் மீது வழக்குகள் பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசியப் புலனாய்வு அமைப்பு அனுமதி கோரியுள்ளது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்ள பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய தேசம் என்னும் தனிநாட்டை உருவாக்கியுள்ளது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு. இதில் இந்தியர்கள் 4 பேர் சேர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், தீவிரவாதச் செயல்களுக்காக இந்திய இளைஞர்களிடையே ஐ.எஸ். அமைப்பு மூளைச்சலவையில் ஈடுபடுவது தெரிய வருகிறது. ஆகையால், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், தீவிரவாதம் தொடர்பான ஐ.நா. சட்டத்தின் அடிப்படையிலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் என்ஐஏ அனுமதி கோரியுள்ளது.
இதன்மூலம், ஐ.எஸ். அமைப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசால் அறிவிக்கப்படுவதற்கு வழிவகை ஏற்படும்.
இதேபோல, சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அண்மையில் வெளியிட்ட விடியோவில், மத்திய அரசுக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் போராடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த அமைப்பின் மீதும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சத்திடம் என்ஐஏ அனுமதி கோரியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.