அனுமதியே பெறாமல் அரசு பங்களாக்களில் தாறுமாறாக கை வைக்கும் மக்கள் தலைவர்கள்!
டெல்லி: சட்டத்தை மதித்து காக்க வேண்டிய பல அரசியல் தலைவர்கள், குறிப்பாக மக்கள் பிரநிதிகள் என்று அழைக்கப்படும் எம்.பிக்கள் சட்டத்தை தூக்கிப் போட்டு மிதிப்பவர்களாக, மக்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அதில் தாங்கள் மஞ்சள் குளிப்பவர்களாக உள்ளது பழைய செய்திதான்.. ஆனால் பாஜகவினரும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது சற்று ஆச்சரியச் செய்திதான்.
பல முக்கிய பாஜக தலைவர்களே மக்கள் பணத்தைக் கொண்டு தாங்கள் வசித்து வரும் வீடுகளை, அரசு பங்களாக்களை, சொந்த பங்களாக்களை அனாவசியமாக ஆடம்பரமாக, அலங்கரித்துள்ள செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் நிதின் கத்காரி, யஷ்வந்த் சின்ஹா, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் முக்கியப் புள்ளிகளாக உள்ளனர். புதிததாக ரூம் கட்டுவது, சுவரை இடித்துத் தள்ளுவது, சமையல் கட்டை மாற்றியமைப்பது, பேட்மிண்டன் கோர்ட் அமைப்பது என இஷ்டத்திற்கு அரசுப் பணத்தை எடுத்து விளையாடியுள்ளனர். எல்லாமே அனுமதி பெறாமல் இவர்களாகவே செய்து கொண்ட மாற்றங்கள்.
வழக்கம் போல இதுவும் ஆர்டிஐ மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் இந்த விவரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.
அரசு வீட்டில் கை வைக்க ரைட்ஸ் கிடையாது
டெல்லியில் உள்ள அரசு பங்களாக்களில் நம் இஷ்டப்படி எந்த மாற்றத்தையும், கட்டுமானத்தையும் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அனுமதியும் இல்லை.
விதி மீறிய 230 எம்.பிக்கள்
ஆனால் இந்த விதியை காற்றில் தாறுமாறாக பறக்க விட்டுள்ளனர் 230 எம்.பிக்கள். கடந்த 10 ஆண்டுகளில் 230 எம்.பிக்கள் தங்கள் இஷ்டப்படி பங்களாக்களை மாற்றியமைத்துள்ளனர்.
யாரெல்லம்
இந்த 230 பேரில் கத்காரி, கல்ராஜ் மிஸ்ரா, யஸ்வந்த் சின்ஹா, ராம் விலாஸ் பாஸ்வான், காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், சுரேஷ் கல்மாடி ஆகியோரும் அடக்கம்.
அமைதி காக்கும் சிபிடபிள்யூடி
ஆனால் 150 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட அனுமதி பெறாத மாற்றங்களை இன்னும் கூட அகற்றாமல் கம்மென்று இருக்கிறது இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய மத்திய பொதுப்பணித்துறை.
400 முதல் 5000 சதுர அடி வரை
இந்த சட்டவிரோத கட்டுமானங்களின் அளவானது 400 சதுர அடி முதல் 5000 சதுரி அடி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனை ரூம்கள் பாருங்க அமைச்சர்களுக்கு!
அமைச்சர்களுக்கான பங்களாக்கள் வழக்கமாக 8250 சதுர அடி பரப்பளவில் இருக்கும். இதில் 8 படுக்கை அறைகள், நான்கு பெரிய ரூம்கள், 2 காரேஜ்கள் இருக்கும். மேலும், முன்னாலும், பின்னாலும் பெரிய புல்வெளிகளும் பரந்து விரிந்திருக்கும்.
எக்ஸ்ட்ரா ரூம் கட்டிய கத்காரி
நிதின் கத்காரி தீன்மூர்த்தி லேனில் 13ம் எண் வீட்டில் முன்பு இருந்தார். அப்போது அங்கு அனுமதி பெறாமல் முன்பக்கம் ஒரு பெரிய அறை, பின்பக்கம் ஒரு அறை, வேலைக்காரர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு அறையைக் கட்டியுள்ளார். அதாவது 1000 சதுர அடிக்கு இதைக் கட்டியுள்ளார்.
சத்ருகன் வீட்டில் ஒரு அறை, அலுவலகம்
அதேபோல முன்னாள் அமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நடிகர் சத்ருகன் சின்ஹா தான் வசித்த பங்களாவில் 1173 சதுர அடி பரப்பளவில் ஒரு அறை மற்றும் அலுவலகத்தைக் கட்டியுள்ளார்.
அலுவலகம், அறை, ஷெட் போட்ட கல்மாடி
ஊழல்வாதியாக முத்திரை குத்தப்பட்டு விட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி தான் வசித்த பங்களாவில் ஒரு அறை, அலுவலகம் மற்றும் ஷெட் போட்டிருந்தார். மொத்தம் 3300 சதுர அடியில் இதைச் செய்திருந்தார்.
பேட்மிண்டன் கோர்ட் கட்டிய கல்ராஜ் மிஸ்ரா
பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா 2006ம் ஆண்டு தான் தங்கியிருந்த அரசு பங்களாவில் சட்ட விரோதமாக ஒரு பேட்மிண்டன் கோர்ட்டை ஏற்படுத்தியிருந்தார். அங்கு டாய்லெட்களையும் கூடுதலாக கட்டியுள்ளார்.
பத்துக்குப் பத்துக்கு அல்லாடும் மக்கள்
பத்துக்குப் பத்து அறை கட்டவே அல்லாடும் மக்கள் நமது நாட்டில் கோடிக்கணக்கில் உள்ளனர். ஆனால் அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அரசின் அனுமதியைக் கூடப் பெறாமல் அலட்சியமாக செயல்படுவது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.