சொந்த அமைச்சர்களை நம்பாத பாஜக... ஒட்டுக் கேட்பு கருவிகள் விவகாரம் குறித்து விளக்கம் கேட்கிறது காங்.
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரியின் வீட்டில், ஒட்டுக்கேட்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அத்தகவலை நிதின் கட்கரி மறுத்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரந்தீப் சிங் இதுகுறித்து கூறியதாவது :-
தீவிர விசாரணை...
மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவிகள் இருந்ததாக கூறப்படும் விவகாரம் உண்மை என்றால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
நம்பிக்கை இல்லாத நிலை...
பாரதிய ஜனதா அமைச்சர்களிடையே ஒருமித்த நம்பிக்கை இல்லாத நிலை இருப்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
விளக்கம் வேண்டும்....
இதுபற்றி நாட்டு மக்களுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு விளக்கமளித்து, தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்...
இதனிடையே, முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், இப்பிரச்னை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.