ஸ்பெக்ட்ரம் வழக்கு தாமதம்: சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மறுப்பு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தாமதப்படுத்தவில்லை என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மறுத்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக கூறி விசாரணையை துரிதப்படுத்தி முடிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை குறித்து, சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, தனது நிலையை விளக்கி உச்சநீதிமன்றத்துக்கு நேற்று தெரிவித்ததாக சி.பி.ஐ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான தனது நிலையை சி.பி.ஐ. இறுதி செய்துவிட்டது. கடந்த 12-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி வழக்கின் செயல்பாடுகளில் துரிதமாக ஈடுபட்டும் வருகிறது.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மற்றும் பதிவேடுகளும் சி.பி.ஐ.க்காக ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
அவர் அடுத்த விசாரணையின்போது இதனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். அப்போது அதில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் திருப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்கிறது சிபிஐ வட்டாரங்கள்.