'வடகிழக்கு போராளிகளுக்கு சீனா, மியான்மர் வழியே வந்து குவியும் ஆயுதங்கள்'
ஷில்லாங்க்: வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த போராளி குழுக்களுக்கு சீனா மற்றும் மியான்மர் வழியாக ஆயுதங்கள் வந்து குவிவதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி சுதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சீனா மற்றும் மியான்மர் வழியே மலைக்காடுகளைப் பயன்படுத்தி ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டு அஸ்ஸாம்- நாகாலாந்து எல்லையான திமாப்பூருக்கு கொண்டுவரப்படுகிறது.
திமாப்பூரில் இருந்துதான் அனைத்து போராளி குழுக்களுக்கும் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த போராளிக் குழுக்களுக்கும் கூட திமாப்பூர்தான் ஆயுத சந்தையாக இருந்து வருகிறது.
பாதுகாப்புப் படையினர் பல முறை திமாப்பூரில் ஆயுதக் குவியலை கைப்பற்றியிருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் பாதுகாப்புப் படையினருடன் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் இப்படியான ஆயுதங்கள் வந்து சேருவதை தடுக்கவே முடியாது.
இவ்வாறு சுதீஷ்குமார் கூறினார்.