வடமாநிலங்களில் வரலாறு காணாத வாக்குப்பதிவு... மேற்கு வங்கத்தில் 82%
டெல்லி: நேற்று நடந்த 6 வது கட்ட லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வடமாநிலங்களில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. தேசிய அளவில் இது சராசரியாக 66 சதவீத ஓட்டுப்பதிவு என தெரிவிக்கப் பட்டுள்ளது.
16வது லோக்சபாவை நிர்மாணிக்க இருக்கும் 9 கட்டத் தேர்தலில் நேற்று 6ம் கட்டமாக 12 மாநிலங்களில் 117 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இம்முறை அதிக வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துள்ளனர். எனவே, வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,
ராஜஸ்தானில் 5 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 59.64 சதவீதமும், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 73 சதவீதமும், புதுவையில் உள்ள ஒரு தொகுதியில் 83 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், பீகாரில் 7 தொகுதிகளில் 60 சதவீதமும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளுக்கு 62.5 சதவீதமும், அஸ்ஸாமில் 6 தொகுதிகளுக்கு 77.05 சதவீதமும், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு 63.4 சதவீதமும் பதிவாகியுள்ளன.
அதேபோல், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 10 தொகுதிகளில் 64.4 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 6 தொகுதியில் 82 சதவீதமும், உத்திரப்பிரதேசத்தில் 12 தொகுதிகளுக்கு 58.58 சதவீதமும், மராட்டிய மாநிலத்தில் 19 தொகுதியில் 55.33 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.