காங்.க்கு மெஜாரிட்டி இல்லையெனில் 3வது அணியோடு கைகோர்ப்போம்: சரத்பவார்
மும்பை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது போனால் 3வது அணியோடு கைகோர்க்க தயங்கமாட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய சரத்பவார், தற்போதைய நிலையில் மூன்றாவது அணி என்பது இல்லை. இதுபோன்ற மூன்றாவது அணி என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் உருவாகும்.
இதுவரை இந்த அணி சேர்க்கை குறித்து எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருடன் நான் விவாதிக்கவில்லை. ஏப்ரல் 24-ந் தேதிக்குப் பின்னர்தான் இதுபற்றி பேசலாம் என இருக்கிறோம்.
லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால் மூன்றாவது அணியோடு கை கோர்க்க தயங்கமாட்டோம் அதற்காக காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறாது என்று சொல்லவில்லை. கணிசமான இடங்களை நாங்கள் பெறுவோம்.
இவ்வாறு சரத்பவார் கூறினார்..