எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மரணம்- 99 வயதில் மரணத்தைத் தழுவினார்
இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர்களில் சிங்குக்குத் தனி இடம் உண்டு.
பாகிஸ்தானில் தற்போது உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹடாலி என்ற நகரில் பிறந்தவர் குஷ்வந்த் சிங். யோஜனா பத்திரிக்கையை நிறுவி அதன் ஆசிரியராக இருந்தவர். இல்லஸ்டிரேட்டேட் வீக்லி இந்தியாவின் ஆசிரியராக இருந்துள்ளார். நேஷனல் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
டிரெய்ன் டூ பாகிஸ்தான், ஐ ஷேல் நாட் நியர் தி நைட்டிங்கேல், டெல்லி ஆகியவை இவர் எழுதிய மிகப் பிரபலமான நூல்களில் சில.
தனது 95வது வயதில் இவர் தி சன்செட் கிளப் என்ற நாவலை எழுதி அசத்தியவர். ஏ ஹிஸ்டரி ஆப் சிக்ஸ் என்ற சீக்கியர்கள் வாழ்க்கை குறித்த இவரது நூல் மிகப் பிரபலமானது. சீக்கிய மதம் குறித்தும் கலாச்சாரம் குறித்தும், டெல்லி, நாட்டு நடப்புகள், அரசியல், காதல், உருதுக் கவிதை, காமம் என இவர் தொடாத விஷயமே இல்லை.
இவரது சுயசரிதை "Truth, Love and a Little Malice". இது 2002ம் ஆண்டு பெங்குவின் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் தன்னைப் பற்றிய பல சர்ச்சைக்கிடமான, கலகலப்பான விஷயங்களை உள்ளது உள்ளபடியே கூறியிருப்பார் குஷ்வந்த் சிங்.
1980 முதல் 86 வரை எம்.பியாகவும் இருந்துள்ளார். 1974ம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்றார். ஆனால், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பியதைக் கண்டித்து 1984ம் ஆண்டு திருப்பிக் கொடுத்து விட்டார்.
இருப்பினும் 2007ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.