நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல்
டெல்லி: நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. அமைச்சர்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பதவியில் தொடருவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என, தன்னைச் சந்தித்த தி.மு.க. அமைச்சர்கள் முறையிட்டதாகவும், இந்த விவகாரத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தரப்பில் எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதியின் ஒப்புதலைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக எம்.பி. ஒருவர், ஆட்சியைக் கலைத்து விடுவோம் என மிரட்டியதாக முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பரத்வாஜ், பிரதமர் இருந்த விமான நிலையத்தில் கட்ஜூ இருந்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் புகழை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ நடந்து கொள்வதாகவும் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.