இனி, வெள்ளிக்கிழமைகளிலும் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம்... ஆனால், கட்டணம் ரூ 5,000!!!
17ம் நூற்றாண்டில் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால். இந்திய - இஸ்லாமியக் கட்டடக் கலையின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர்.
ஆனபோதும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தாஜ்மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் ஆக்ரா கோட்ட ஆணையாளர் பிரதீப் பட்நர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, தாஜ்மஹாலை வெள்ளிக்கிழமைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டது. அதன் முடிவில், விரைவில் வெள்ளிக்கிழமைகளிலும் தாஜ்மஹாலை பார்வையாளர்கள் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தாஜ்மஹாலைப் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். ஆனால், அன்றைய தினம் சிறப்புக் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய், வசூலிக்கலாம் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த உத்தரவு விரைவில் அமல் படுத்தப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.