ஒடிசா சட்டசபைக்கு நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு: 4வது முறை முதல்வர் ஆவாரா நவீன்!
புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் 2ம்கட்ட சட்டசபை தேர்தலும் நாளை நடக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் 21ம், சட்டசபை தொகுதிகள் 147ம் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடனே ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஏப்ரல் 10ம்தேதி முதல்கட்டமாக 70 சட்டசபை தொகுதிகளுக்கும், 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 77 சட்டசபை தொகுதிகளுக்கும், 11 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் 103 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியால் 27 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் பிஜுஜனதாதளம் வசமாயின. காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.
பிஜு ஜனதாதளம், காங்கிரஸ் தவிர, பாஜக, ஆம் ஆத்மி, ஒடிசா ஜனமோர்ச்சா, ஆமா ஒடிசா கட்சி, சமதா கிராந்தி தள், பகுஜன் சமாஜ்கட்சி, ஜே.எம்.எம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்திலுள்ளன. கடந்த காங்கிரஸ் கையில் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பிஜு ஜனதாதளம், கடந்த 2000வது ஆண்டில் இருந்து தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறது.
தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் நவீன்பட்நாயக் உள்ளபோதிலும், கடந்தாண்டு பைலின் புயலால் ஏற்பட்ட சேத நிவாரண நடவடிக்கைகள்
குறித்து மக்களிடம் உள்ள அதிருப்தியால் பிஜு ஜனதாதளத்துக்கு பின்னடவை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. நாளை நடைபெறும் 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 60 லட்சம்பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.