ஒடிஷாவில் மிரட்டலை மீறி 79% வாக்குகள் பதிவு- மாவோயிஸ்டுகள் அதிர்ச்சி!!
மல்காங்கிரி: ஒடிஷாவில் தங்களது கோட்டை எனக் கருதப்படும் பகுதிகளிலேயே 79% வாக்குகள் பதிவாகி இருப்பது மாவோயிஸ்டுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் 3வது கட்டமாக நேற்று 91 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள ஒடிஷா மாநில தொகுதிகளும் அடங்கும்.
இங்கு தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்த மாவோயிஸ்டுகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அத்துடன் வாக்குப் பதிவுக்கு முன்பாக ஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து தேர்தல் பணிக்கான வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்தனர்.
ஆனாலும் ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரை மொத்தம் 48.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இதில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் எனச் சொல்லப்படும் டெல்ராய் வாக்குச் சாவடியில் மிரட்டலையும் மீறி 79% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அங்கு 931 வாக்காளர்களில் 741 பேர் வாக்களித்துள்ளனர். இது மாவோயிஸ்டுகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதேபோல் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ள கலிமேலா, மோட்டு, ஹாய்ர்புட், முதலிபாடா, கோவிந்தபள்ளி உள்ளிட்ட பல இடங்களில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாததால் தேர்தல் பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.