வரலாறு காணாத ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா நன்றி
ஸ்ரீ நகர்: வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தத்தளித்த நிலையில், தகுந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் உண்டானது. இதனால் மாநிலத்தின் பலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் சேதத்தைச் சந்தித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழையின் அளவு குறைந்திருப்பதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.
அப்போது, மீட்பு பணியில் மாநில அரசுக்கு பெரும் உதவியாக இருந்த மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். உரிய சமயத்தில் உதவியதாக மத்திய அரசை அவர் பாராட்டினார்.
மேலும், வரும் வியாழன் முதல் மாநில அரசு தனது பணியினை தீவிரப்படுத்த உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். அதேபோல், மாநில அரசுக்கு தருவதாக கூறியுள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்ககவேண்டும் என்றும் உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் கூட அரசு தனது பணியினை செய்து மாநிலத்தில் சகஜ நிலையை திரும்பக் கொண்டுவர அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.