வெங்காய விலை கடுமையாக உயரும்.. எச்சரித்த உளவுத்துறை.. மெத்தனமாக இருந்த அரசு
டெல்லி: வெங்காய விலை கடுமையாக உயரும் என்று 2 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட துறைகள் அலட்சியமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்காணித்து மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது ஐபி.
2 மாதங்களுக்கு முன்பே, வெங்காய விலை ஏற்றம் குறித்தும் எச்சரித்துள்ளது. ஆனால் அதை மத்திய அரசின் துறைகள் சரிவர கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளன.
கடுமையான விலை உயர்வு
நாடு முழுவதும் வெங்காயம் உள்பட பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் என்று ஐபி எச்சரித்துள்ளதாம்.
அத்தனைத் துறைகளுக்கும் உரிய தகவல்
மேலும் இதுதொடர்பான தகவலை உரிய துறைகளுக்கு உடனடியாகவும் அது அனுப்பி வைத்து எச்சரித்துள்ளது.
தேமே என்று இருந்த துறைகள்
ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும், துறைகளும் இந்த எச்சரிக்கையை சரிவர பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியுள்ளனவாம்.
பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் கூட எச்சரிக்கை
இந்தத் தகவலை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் கூட உளவுத்துறை அனுப்பி வைத்திருந்ததாம். குறிப்பாக வெங்காய விலை மிகக் கடுமையாக உயரும் என்று இந்த செய்தியில் ஐபி குறிப்பிட்டிருந்ததாம்.
பதுக்கலே முக்கியக் காரணம்
வெங்காயப் பதுக்கல் அதிக அளவில் நடைபெறுவதாலும், இதனால் வெங்காய விலை கடுமையாக உயரும் என்றும் ஐபி எச்சரித்திருந்ததாம்.