இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு மறுப்பு- ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!
டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸாவில் இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதில் பிஞ்சு குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முட்டுக்கட்டை போட்ட சுஷ்மா
இஸ்ரேலின் இந்த அட்டூழியம் குறித்து ராஜ்யசபாவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரினர். கடந்த வாரம் விவாதம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு முட்டுகட்டை போட்டார்.
விவாதம்
ஆனாலும் ராஜ்யசபா தலைவரான ஹமீத் அன்சாரி விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த நிலையில் ராஜ்யசபாவில் இன்று காஸா இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.
குலாநம்பி ஆசாத்
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் பேசுகையில், பாலஸ்தீனம் தொடர்பான மத்திய அரசின் நிலையில் மாற்றம் வந்துவிட்டதா? இரண்டு வாரங்களாக இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து கொண்டிருக்க நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரேலைக் கண்டித்து இங்கே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இஸ்ரேலின் இனப்படுகொலை- யெச்சூரி
மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி பேசுகையில், இஸ்ரேலின் 'இனப்படுகொலை'யைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாரதிய ஜனதாவுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி என்பதால் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோலதான் ஹமாஸ் இயக்கமும்... அது தீவிரவாத இயக்கமாக சொல்லப்பட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகமது ஹசன் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தை மத்திய அரசு எழுப்ப வேண்டும் என்றார்.
தீர்மானம் இல்லை: சுஷ்மா
இந்த விவாதத்தின் முடிவில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ராஜ்யசபாவில் தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை என்றார்.
வெளிநடப்பு
ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களோ இஸ்ரேலைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினர். மத்திய அரசு தொடர்ந்தும் மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.