பெங்களூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 150 பேருக்கு வாந்தி, மயக்கம்
பெங்களூர்: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் டி.ஜே.ஹள்ளி பகுதியில் அரசு உருது பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு பள்ளி வளாகத்தில் பறிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் பலருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 150க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, ரோஷன்பெய்க், யூ.டி.காதர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள், துரிதகதியில் சிகிச்சையளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.
உணவில் பல்லி விழுந்ததால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மாணவர்கள் அனைவருமே அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.