தொடர் விடுமுறை எதிரொலி... ஒரே நாளில் தாஜ்மகாலை 48,000 பேர் பார்வையிட்டு சாதனை
ஆக்ரா: தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த விடுமுறையின் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கடந்த சனிக்கிழமையன்று மட்டும் சுமார் 48 பேர் பார்வையிட்டுள்ளனர். ஒரே நாளில் இத்தனை பயணிகள் தாஜ்மகாலைப் பார்வையிட்டது சாதனையாகக் கருதப்படுகிறது.
காதலின் சின்னமாக திகழும் தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. தன் மனைவி மும்தாஜிற்காக ஷாஜகான் கட்டிய இந்த மகாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களானதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சனிக்கிழமை மட்டும்...
கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 48 ஆயிரத்து 809 நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளது.
55 ஆயிரம் பயணிகள்...
குழந்தைகளையும் சேர்த்து கடந்த சனிக்கிழமையன்று மொத்தம் 55 ஆயிரம் பயணிகள் தாஜ்மகாலின் அழகை ரசித்து சென்றுள்ளனர்.இவர்களில் 2,646 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை முறியடிப்பு...
கடந்த கோடை விடுமுறையின் போது ஒரு விடுமுறை நாளின் போது அதிகபட்சமாக 43 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியது. அதனை முறியடிக்கும் வகையில் தற்போதைய எண்ணிக்கை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு...
தாஜ்மகாலைக் காண அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஆக்ரா பகுதியின் சாலைகளிலும் வாகன நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.