பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்க முடிவு! ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!!
ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி இந்திய ராணுவத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ள உத்தரவை தொடர்ந்து இந்திய ராணுவம் புது உற்சாகம் அடைந்துள்ளது. இந்திய வீரர்களின் அடுத்தடுத்த தாக்குதல்களால் பாகிஸ்தான் நிலை குலைந்து போயுள்ளதாக எல்லையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடியில் இந்தியா
காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது வாலாட்டிக்கொண்டுள்ளது. தீவிரவாதிகளும் எப்படியாவது காஷ்மீருக்குள் ஊருடுவ முயன்று வருகின்றனர். இந்திய-பாகிஸ்தான் உறவு சீரடைவதை போல தெரிந்ததும், இந்த தாக்குதல்கள் அதிகரித்தன. முதலில் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்திய ராணுவம், தற்போது அதிரடி ஆட்டத்தை காட்டிவருகிறது.
இழப்பு குறைந்தது
சச்சினிடம் சிக்கிய அக்தர் போல இப்போது தெறிந்து ஓடிக்கொண்டுள்ளனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். உதாரணத்துக்கு, கடந்தாண்டில் மட்டும், இந்திய ராணுவத்தினர் 12 பேர் பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இந்தாண்டு இதுவரை ஒரு வீரர் நமது தரப்பில் வீரமரணம் அடைந்துள்ளார்.
பத்தே நாளில் அதகளம்
கடந்த 16ம்தேதி முதல்தான் இந்திய ராணுவம் தாக்குதலை ஆரம்பித்தபோதிலும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது பத்தே நாட்களில் இந்த சேதம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்களில், ராணுவத்தினர், லஷ்கர் தீவிரவாதிகள் மற்றும் அந்த நாட்டு பொதுமக்களும் அடங்குவர். அதேபோல 24க்கும் மேற்பட்டோர் இந்திய குண்டுகளால் காயமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் பச்சைக்கொடி
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீது உக்கிரமான எதிர்தாக்குதலை நடத்த மத்திய அரசு இம்மாத இரண்டாம் வாரத்தில் காண்பித்த பச்சைக்கொடிதான் நமது ராணுவத்தின் எழுச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லை பாதுகாப்பு படை டிஜி, பதக் ஆகியோர் சமீபத்தில் நடத்திய ஆலோசனையின்போது பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முடிவு செய்யப்பட்டது.
ராணுவ பலம் அதிகம்
இதுகுறித்து பதக் நிருபர்களிடம் கூறுகையில் "பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதே நேரம், பாகிஸ்தானின் எல்லையோர பகுதிகளிலுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதிலும் கவனம் வைப்போம்" என்றார். "பாகிஸ்தானை விட நம்மிடம் மூன்று மடங்கு அதிகமான ரேஞ்சர் வீரர்கள் உள்ளனர். ஆயுதங்களும் அதிகம். பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்தும்வரை நாங்களும் நிறுத்தப்போவதில்லை" என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரவில் தாக்கும் கோழைகள்
பாகிஸ்தான் ராணுவம், இந்திய மக்களின் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், எல்லையோர மக்கள், பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகலில் வேலைக்கு செல்லும் அம்மக்கள், இரவு நேரங்களில் பள்ளி கட்டிடங்களில் ராணுவ பாதுகாப்புடன் தங்குகின்றனர். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் கோழைகளை போல இரவில்தான் தாக்குதல் நடத்திவருவதாக எல்லையோர பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.