காஷ்மீர் எல்லையில் 25 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் 25 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் எப்போதும் நல்லுறவை இந்தியா விரும்பினாலும், பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இந்தியாவுடன் தொடர்ந்து விரோதம் பாராட்டி வருகின்றன.
இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டு தீவிரவாதிகள் ஒருபுறம் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லையில் அவ்வப்போது வாலாட்டி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
குடியிருப்புகளிலும் தாக்குதல்
காஷ்மீர் எல்லையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. முதலில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், தற்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் திரும்பியுள்ளதால், எல்லைப்பகுதி மக்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இருவர் பலி
ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் கடந்த 22-ந் தேதி இரவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், அங்கு வசித்து வந்த தந்தை-மகன் பலியாயினர். மேலும் எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்குள்ள கொரட்டனா, திரேவா, கரனா உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதியில் வசித்து வரும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
25 எல்லைச் சாவடிகளில்
இந்த நிலையில் நேற்று முன்தினமும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்தது. ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களின் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, ராம்கர் பகுதிகளில் அமைந்துள்ள 25 ராணுவ எல்லைச்சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இரவு 8.30 மணி அளவில் தாக்குதலை தொடங்கியது.
மேலும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 19 கிராமங்களிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவம் பதிலடி
இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே இரவு முழுவதும் நீடித்த சண்டை, நேற்று காலை 7.30 மணி வரை நீடித்தது. இதனால் எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
எனினும் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். திரேவா பகுதியில் 3 பசுக்கள் உயிர் இழந்தன.
வெளியேறுகிறார்கள்
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் நீடிப்பதால், காஷ்மீரில் எல்லைப் பகுதியில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
20 முறை
காஷ்மீரில் இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 20 முறை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களை இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தாலும், அங்கு நிரந்தரமாக அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ்நாத் சிங் உத்தரவு
இந்த நிலையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சரியான பதிலடி கொடுக்குமாறு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.
அருண் ஜெட்லி
இதுகுறித்து மத்திய ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், "காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள நமது வீரர்கள் இந்திய மண்ணுக்கும், மக்களுக்கும் முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்," என்றார்.