நாடாளுமன்ற விதிகளை கீதை உபதேசங்களாக பின்பற்ற வேண்டும்- எம்.பிக்களுக்கு மோடி வலியுறுத்தல்
டெல்லி: நாடாளுமன்ற விதிகள் அனைத்தையும் பகவத் கீதை உபதேசங்கள் போல எம்.பி.க்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புதிதாக பதவியேற்ற பாஜக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சியளிக்க, டெல்லி-ஹரியானா நடுவேயுள்ள சுரஜ்கண்ட் என்ற இடத்தில் 2நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து வரவேற்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்களை எப்படி கையாளுவது என்பதை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தங்கள் தொகுதிகளில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து மீடியாக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மட்டுமே எம்.பிக்கள் பதில் அளிக்க வேண்டும். மீடியாக்களின் ஸ்டிங்-ரகசிய, ஆபரேசன் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
எம்.பிக்கள், தொகுதி வளர்ச்சியை குறிக்கோளாக கொள்ள வேண்டும். இதற்கென அனைவரும் முன்கூட்டியே திட்ட அறிக்கையை தயாராக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தொகுதிக்கு பொறுப்புள்ளவராக, மக்கள் தேவைகளை நிறைவேற்றும் விதமாக பணியாற்ற வேண்டும்.
அரசின் கொள்கைள் அனைத்தையும், குழப்பமின்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் விதிகளை பகவத் கீதையின் உபதேசம் போல உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்தின் வெளியேவும் நமது செயல்பாடுகள் நன்னடத்தை கொண்டதாக இருக்க வேண்டும். போலியாக பில் தயாரித்து பயண கணக்கு காண்பிக்க கூடாது.
இவ்வாறு மோடி பேசினார்.