ஆந்திராவிலும் பாஜக அணியில் ஒரு 'ராமதாஸ்', 'விஜயகாந்த்
ஹைதராபாத்: தமிழகத்தில் பாஜக அணியில் எலியும் பூனையுமாக எப்படி பாமக நிறுவனர் ராமதாஸும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இருக்கிறார்களே அதேபோல் ஆந்திராவில் பாஜக அணியில் ஒரு ராமதாஸ்- விஜயகாந்த் இடம்பெற்றுள்ளனர்.
சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாரதிய ஜனதாவும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் திடீரென கட்சி ஆரம்பித்து தாம் மோடியை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். ஆனால் பாஜக அணியில் அவர் இடம்பெறவில்லை.
பவன் கல்யாண் வருகையை ரசிக்காத சந்திரபாபு
பாஜக அணியில் பவன் கல்யாண் இடம்பெறுவதை அதாவது தமிழகத்தில் பாஜக அணியில் விஜயகாந்த் இடம்பெறுவதை எப்படி ராமதாஸ் விரும்பாமல் இன்னமும் இருக்கிறாரோ அதேபோல் அங்கு சந்திரபாபுவும் விரும்பவில்லையாம்.
நாயுடு பெயரையே சொல்லலை
இது நேற்று மோடி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகவே வெடித்தது. முதலில் நிஜாமாபாத்தில் மோடி பங்கேற்ற பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பவன் கல்யாண் கலந்து கொண்டார். இதற்காக தனி ஹெலிகாப்டரில் நிஜாமாபாத் சென்றார் பவன் கல்யாண்.
ஆனால் இந்த கூட்டத்தில் பேசிய மோடியும் சரி பவன் கல்யாணும் சரி மறந்தும் கூட சந்திரபாபு நாயுடுவின் பெயரை உச்சரிக்கவில்லை. இதனால் அந்த கூட்டத்துக்குப் போன தெலுங்குதேசம் தொண்டர்கள் கொந்தளித்துப் போயிருந்தனர்.
நாயுடு கூட்டம் புறக்கணிப்பு
இதன் பின்னர் மகபூப் நகர் மற்றும் கரீம்நகர் பொதுக்கூட்டங்களில் மோடியுடன் சந்திரபாபு கலந்து கொண்டார். ஆனால் பவன் கல்யாண் ஹைதராபாத்துக்குப் போய்விட்டார். பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடியுடன் சந்திரபாபுவும் பவன் கல்யாணும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
ஹைதராபாத்திலும் அக்கப் போர்
இருப்பினும் பவன் கல்யாண் பேசும்போது, சந்திரபாபு நாயுடுவின் பெயரை சொல்லவில்லை..தெலுங்குதேசம் கட்சி என்று மட்டுமே சொன்னார்.. சந்திரபாபு நாயுடுவோ, பவன் கல்யாண் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஆனால் மோடியோ இருவரும் தமது நண்பர்கள் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
நண்பருக்கு சீட் தரலையாம்..
பவன் கல்யாணின் இந்த காட்டத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். தமது நண்பர் பொட்லூரி வர பிரசாத்தை எப்படியாவது தெலுங்குதேசம் அல்லது பாஜக சார்பில் விஜயவாடா லோக்சபா தொகுதியில் நிறுத்துவது என்று போராடிப் பார்த்தாராம் பவன் கல்யாண். ஆனால் எதுவும் நடக்காத அதிருப்தியாம்.
இதனால்தான் தமிழகத்து ராமதாஸ்- விஜயகாந்த் போல ஆந்திர பாஜக அணியில் இருவரும் முறுக்கிக் கொண்டு இருக்கிறார்களாம்.