2009-ல் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க முன்வந்த சரத்பவார்- பரபரப்பு தகவல்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2009 சட்டசபை தேர்தலின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தார் என்று லோக்சபா முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோஷி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரை மையப்படுத்தியே தற்போது அரசியல் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு சரத்பவார் விருப்பம் தெரிவித்ததாக சிவசேனாவின் உத்தவ்தாக்கரே மற்றும் கோபிநாத் முண்டே ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோஷியும் சரத்பவார், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க எப்படியெல்லாம் முயற்சி மேற்கொண்டார் என்ற தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய ஜோஷி, சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூட்டணி குறித்து சரத்பவாரிடம் பேசினேன். முதலில் கூட்டணிக்கு பவார் ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் பின்வாங்கினார். அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றார்.
ஆனால் மனோகர் ஜோஷி கூறியுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சி. தேசியவாத காங்கிரஸின் நவாப் மாலிக் கூறுகையில், மனோகர் ஜோஷிக்கு தற்போது சிவசேனாவில் இடமில்லை. கட்சி அவருக்கு லோக்சபா தேர்தலிலோ, ராஜ்யசபா தேர்தலிலோ சீட் தரவில்லை. இதனால் விரக்தியில் இருக்கிறார். கட்சிக்குள் நற்பெயர் சம்பாதித்து மீண்டும் சிவசேனாவில் இடம் பிடிக்க ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் என்றார்.