4ம் கட்ட லோக்சபா தேர்தல்: அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், கோவாவில் அமைதியான வாக்குப்பதிவு
டெல்லி: அஸ்ஸாம் மற்றும் கோவா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கியது. மதியம் 1 மணி வரை 52.52 சதவிகித வாக்குகள் பதிவானது.
கோவாவில் மிதமான வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு காலை 7 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை 54 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிக்கிம் நிலவரம்
சிக்கிமில் மதியம் 1 மணி நிலவரப்படி 40 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
திரிபுரா நிலவரம்
திரிபுராவில் காலை 11.15 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிது.
முதல் கட்ட தேர்தல்
16வது நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு நடந்தது.
2ம் கட்டத் தேர்தல்
2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 9 ஆம் தேதி அருணாசலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும், மணிப்பூர், மிசோராம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதிகளிலும் நடந்தது.
3ம் கட்டத் தேர்தல்
3வது கட்ட தேர்தல் 10ஆம் தேதி கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும், ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும், பீகாரில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபர், சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளிலும் என மொத்தம் 91 தொகுதிகளிலும் நடந்தது.
4ம் கட்டத் தேர்தல்
இதை தொடர்ந்து இன்று 4 ஆம் கட்ட தேர்தல் 4 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதன்படி, அசாமில் மூன்று தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், சிக்கிம், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தீவிர கண்காணிப்பு
அசாமில் நான்கு மாவட்டங்களில், கர்பி மக்கள் விடுதலை அமைப்பு நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
வாக்காளர்கள்
இந்த தேர்தலில், மூன்று தொகுதிகளில் மொத்தம் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவிற்கென அமைக்கப்பட்டுள்ள 3,698 வாக்குச்சாவடிகள் 29 லட்சத்து 26 ஆயிரத்து 762 பேர் வாக்களித்தனர்.
சிக்கிம் மாநிலத்தில் 32 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக 538 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3 லட்சத்து 70 ஆயிரத்து 731 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.