மன்மோகன் அரசியல்வாதியே அல்ல.. கூட்டணி அரசியலே தெரியாதவர்: தாக்குகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால்!!
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அண்மையில்தான் இரண்டு புத்தகங்கள் வெளியாகின. இந்த நிலையில் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வாலும் அவரை மிகக் கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது:
பிதமர் மன்மோகன்சிங் எப்போது ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டது இல்லை. அவரைப் பொறுத்தவரை கூட்டணி அரசியலைப் பற்றிய புரிதல் இல்லை. அதில் சிக்கல்களை உள்வாங்கத் தெரியவில்லை.
அவர் எப்போதும் ஒரு அரசியல்வாதியாக செயல்பட்டது இல்லை. அவர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டவரும் கிடையாது. அவரை திடீரென பிரதமராக்கிவிட்டனர். அவரைப் பொறுத்தவரையில் முதல் 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2வது பதவிக் காலம் என்பது கூட்டணி அரசு என்பதை அறிவோம். ஒரு கூட்டணி அரசை நடத்துவது என்பது மிகவும் கடினமானது. அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாதபோது அதற்கான விலையையும் அவர் கொடுத்தாக வேண்டியதுதான்.
மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி தெரியாதவர்.
இவ்வாறு போட்டுத் தாக்கியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.