செவ்வாயில் நுழையும் மங்கள்யான்.. பெங்களூரிலிருந்தபடி நேரில் பார்க்கிறார் மோடி!
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நாளை மங்கள்யான் விண்கலம் நுழைவதை பெங்களூருக்கு வந்து நேரில் பார்வையிடவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இதற்காக இன்று மாலை அவர் பெங்களூர் வருகிறார். பின்னர் நாளை காலையில் , இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நுழையும் நிகழ்வைக் காணவுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் தானும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று மோடி விரும்பியதாகவும், இதற்காக அவர் பெங்களூர் வருவதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு பெங்களூர் வருகை
இன்று இரவு பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி நாளை காலை பெங்களூர் அருகே உள்ள விண்வெளி மையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்தபடி மங்கள்யான் நிகழ்வைக் காண்கிறார்.
காலை 6.45 மணி முதல்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகாலை 4.7 மணிக்கே சுற்றுப் பாதையில் மங்கள்யானை செலுத்துவது தொடர்பான பணிகள் தொடங்கி விடும் என்ற போதிலும், பிரதமர் மோடி, 6.45 மணி முதல் மையத்தில் இருப்பார். காலை 7.17 மணிக்குத்தான் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது. அப்போது பிரதமர் மோடி அதை நேரில் காண்பார். காலை 7.53 மணியளவில் செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்தான் நுழையும் என்று தெரிவித்தார்.
எட்டே கால் மணிக்கு தகவல் வரும்
செவ்வாய்க்கும், பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்புக்கு 12.5 நிமிடங்கள் ஆகும் என்பதால், செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழைந்து விட்டது தொடர்பான செய்தி நமக்கு காலை 8.15 மணிக்குத்தான் கிடைக்கும்.
ஆர்வம்
மோடி பிரதமரானதிலிருந்து விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பிரதமரான பின்னர், ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய ராக்கெட் ஏவப்பட்டதை நேரில் கண்டு மகிழ்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முதல் முறையாக
பிரதமரான பின்னர் கர்நாடகத்திற்கு மோடி முதல் முறையாக வருவதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
தும்கூரில்
விமான நிலையவளாகத்திலேயே தனது கட்சியினர் மத்தியில் மோடி பேசுவார் என்று தெரிகிறது. மேலும் மங்கள்யான் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் தும்கூரில் மிகப் பெரிய உணவுப் பூங்காவைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 5000 விவசாயிகளும், 10,000க்கும் மேற்பட்ட பாஜகவினரும் கூடவுள்ளனர்.