‘தூய்மையான இந்தியா’... கமல், சச்சின், பிரியங்கா சோப்ரா, அம்பானிக்கு மோடி அழைப்பு
டெல்லி: ‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்' திட்டத்தில் இணைந்து செயலாற்ற நடிகர் கமல்ஹாசன், சச்சின் டெண்டுல்கர் உட்பட 9 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .
மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்று ‘தூய்மையான இந்தியா'. எனவே அதனை நனவாக்கும் வகையில், இன்று பிரதமர் மோடி ‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதன்படி, பள்ளி, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களை மக்கள் தூய்மையாக பேணி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று டெல்லி செங்கோட்டை அருகே இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:-
9 பிரபலங்கள்...
தூய்மையான இந்தியாவை உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன்.
மக்களின் பொறுப்பு...
சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. இது அமைச்சர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு மட்டும் இல்லை. இது பொதுமக்களுடைய பொறுப்பும் கூட.
இந்தியாவை சுத்தம் செய்வோம்....
இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நாடு முழுவதும் வெற்றி கண்டது. அதேபோல் இந்தியாவை சுத்தம் செய்வோம் என்று இயக்கத்தில் 125 கோடி மக்களும் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
தூய்மையான இந்தியா...
மகாத்மா காந்தியின் கொள்கைகளை நம்புங்கள். சமூக வலைதள பக்கத்தில் ‘சுத்தமான இந்தியா' இயக்க பிரச்சாரத்திற்கான உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதியளிக்க வேண்டும்.
வெளிநாடுகளில்...
நாம் வெளிநாடு செல்லும் போது அந்த நாடுகள் எப்படி சுத்தமாக இருக்கிறது என்று பார்க்கிறோம், மக்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை நாம் அங்கு பார்க்கவில்லை. எனவே தான் அங்கு சுத்தமாக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.