"இந்துராஷ்டிரத்தை" பிரதமர் மோடி உருவாக்குவார்: கோவா அமைச்சர் "நம்பிக்கை"
பனாஜி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கி காட்டுவார் என்று கோவா அமைச்சர் தீபக் தவலிகர் கூறியுள்ளார்.
கோவாவில் ஆளும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மகாரஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தீபக் தவலிகர். கோவாவின் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவரது சகோதரரும் மாநில அமைச்சருமான சுதின் தவலிகர் சில நாட்களுக்கு முன்பு, கடற்கரைகளில் பிகினி உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். குட்டை பாவடைகளுடன் மதுபான விடுதிகளுக்கு பெண்கள் செல்வதை தடை செய்ய வேண்டும். இவை அனைத்துமே இந்திய கலாசாரத்துக்கு எதிராக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
சுதின் தவலிகரின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் தீபக் தவலிகர், நாம் அனைவருமே பிரதமர் மோடிக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயமாக இந்தியாவை ஒரு இந்துராஷ்டிராமாக்கிக் காட்டுவார் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே லோக்சபா தேர்தல் முடிவுகளின் போதும் இதே கருத்தை தீபக் தவலிகர் கூறி சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.