ஆண்மை சோதனை செய்ய ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீர்கள்?: நித்யானந்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: ஆண்மை சோதனை செய்து கொள்ள நித்யானந்தா ஏன் பயப்படுகிறார் என்று கேட்ட உச்ச நீதிமன்றம் பலாத்கார வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆண்மை சோதனை செய்வது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா மீது அவரது சீடரான ஆர்த்தி ராவ் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நித்யானந்தா தான் ஒரு ஆண்மை இல்லாத ஆள் என்று போலீசாரிடம் தெரிவித்தார். அதை நம்ப மறுத்த போலீசார் அவருக்கு ஆண்மை சோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 5ம் தேதி தடை பெற்றார்.
இந்நிலையில் நித்யானந்தாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரை ஆண்மை சோதனை செய்ய வலியுறுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.
அவரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் கூறுகையில்,
2010ம் ஆண்டு நித்யானந்தா மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் அவருக்கு ஏன் இன்னும் ஆண்மை சோதனை செய்யவில்லை. பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிச்சயம் ஆண்மை சோதனை செய்ய வேண்டும். அதுவும் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை மிகவும் அவசியம்.
நித்யானந்தா எதற்காக இந்த சோதனையை செய்ய அச்சப்பட வேண்டும்? நீங்கள் சோதனை செய்ய தயங்குவதில் இருந்து ஏதாவது நினைக்கத் தோன்றும். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.