'பொது அமைதியை சீர்குலைப்பவர்கள்'.. கெஜ்ரிவாலுக்கு பிரணாப் மறைமுக 'கொட்டு'!
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது குடியரசு தின உரையின்போது பொது அமைதியை சீர்குலைப்பவர்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினருக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் குடியரசுத் தலைவர் எங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாறாக இந்திய அரசியலின் தற்போதைய நிலையைத்தான் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.
பிரணாப் முகர்ஜி தனது உரையில், கற்பனைகளுடன் வாழ்வதற்கு தேர்தல்கள் யாருக்கும் உரிமம் கொடுக்கவில்லை. கொடுப்பதும் இல்லை. அரசாங்கம் என்பது ஏதோ சேவை நிறுவனம் போல அல்ல. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது என்பது நல்ல அரசு நிர்வாகம் அல்ல. பொய்யான உறுதிமொழிகள்தான், கற்பனையான நிர்வாகத்திற்கு இட்டுச் செல்லும். இதனால் அதிருப்தியும், கோபமும்தான் வெடித்துக் கிளம்பும். அது ஆட்சியில் இருப்பவர்கள் மீதுதான் திரும்பும்.
மேலும், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுபவர்கள், அதை நிறைவேற்றுவதிலும் சிரத்தை காட்ட வேண்டும். மேலும், நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் வாக்குறுதியே தர வேண்டும் என்று கூறியுள்ளார் பிரணாப்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் விளக்கம் தெரிவிக்கையில், குடியரசுத் தலைவரின் உரையை பிரித்துப் பார்க்கக் கூடாது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலையை மனதில் கொண்டுதான் குடியரசுத் தலைவர் அப்படிப் பேசியுள்ளார் என்று நான் நம்புகிறேன். வாரிசு அரசியலில் சிக்கி நாடு தவிக்கிறது. இதுதான் மக்களின் அமைதி சீர்கேட்டுக்கு முக்கியக் காரணம். சர்வாதிகாரமே தலையோங்கி நிற்கிறது. இதுதான் சீர்கேட்டுக்கு முக்கியக் காரணம். இதைத்தான் குடியரசுத் தலைவர் சொல்லியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தையும், அவரது உரையையும் விமர்சித்து அதன் கண்ணியத்தைக் குலைக்க நாங்கள் விரும்பவில்லை. முயற்சிக்கவும் இல்லை என்றார் யாதவ்.