நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவக்கம்: விலை உயர்வு பிரச்சனையை எழுப்ப கட்சிகள் திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு கடந்த மாதம் 4ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார், சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டாரர்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்தார். அதன் பிறகு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. வரும் 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார்.
பொது பட்ஜெட்
9ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். வரும் 10ம் தேதி அவர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
ஆகஸ்ட்
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை துவங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு
பட்ஜெட் கூட்டத் தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு குறித்து பிரச்சனையை கிளப்ப பிற கட்சிகள் முடிவு செய்துள்ளன.