இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்! வன்முறை வெடித்ததால் போலீஸ் தடியடி!!
ஸ்ரீநகர்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
காஸா பகுதியில் கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை இரவு பகலாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பிஞ்சு குழந்தைகளும் அப்பாவி பொதுமக்களும்தான்
உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் இஸ்ரேல் தனது வெறியாட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையைக் கண்டித்து உலகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹூரியத் அமைப்பினர் தலைமையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்கார்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.